பின்னிரவு இரண்டு மணிக்கு மிளகாய் மூட்டை இறக்கியதில்லை அதிகாலை நாலரை மணிக்கு தேநீர்க்கடை கதவைத் திறந்ததில்லை முழங்காலளவு தண்ணீரில் மூன்று சக்கர வண்டி முழுதுமாய் சமையல் வாயு சுமந்ததில்லை கொதிக்கின்ற கோடையில் நீண்ட தார்ச்சாலைகளில் கறிகாய் விற்றவனில்லை ஏழு மணிவரை தூக்கம் எட்டு மணிக்கு குளியல் ஒன்பது மணிக்கு பங்குச் சந்தையுடன் பலகாரம் பத்து மணிக்கு office பத்தரைக்கு tired ஆ இருக்கு. வாங்க டீ சாப்பிடலாம்.
பேய்களும் உறங்கும் பின்னிரவிலும் விழித்திருக்கிறேன் நான் கண்ணீரின் உப்புக்கரை படிந்த அலைபேசித் திரையை துடைத்தபடி ... நீங்கா உன் நினைவுகள் நீட்டிக்கொண்டே போகின்றன என் இரவுகளை... ஒவ்வொரு பாடலிலும் உனக்காய் ஒரு வரி ஒவ்வொரு அறையிலும் எனக்கான உன் வாசனை ஒவ்வொரு நிமிடமும் உனக்கான ஒரு எண்ணம் விழியோடு விழி தொட விரலோடு விரல் தொட அருகிலாது பிரித்தபடி சிரிக்கிறது காலம் பிரியமாய் புன்னகைக்கும் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே காலத்தை கடக்கிறது நம் காதல்
Comments
Post a Comment